திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.97 திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம்
கோவாய் முடுகி யடுதிறற்
    கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற்
    பொறித்துவை போகவிடின்
மூவா முழுப்பழி மூடுங்கண்
    டாய்முழங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே.
1
காய்ந்தாய் அனங்கன் உடலம்
    பொடிபடக் காலனைமுன்
பாய்ந்தாய் உயிர்செகப் பாதம்
    பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்தாய்ந் தறுப்பாய் அடியேற்
    கருளாயுன் அன்பர்சிந்தை
சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே.
2
பொத்தார் குரம்பை புகுந்தைவர்
    நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போல் மறுகுமென்
    சிந்தை மறுக்கொழிவி
அத்தா அடியேன் அடைக்கலங்
    கண்டாய் அமரர்கள்தஞ்
சித்தா திருச்சத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே.
3
நில்லாக் குரம்பை நிலையாக்
    கருதியிந் நீணிலத்தொன்
றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு
    வேனைவந் தாண்டுகொண்டாய்
வில்லேர் புருவத் துமையாள்
    கணவா விடிற்கெடுவேன்
செல்வா திருச்சத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே.
4
கருவுற் றிருந்துன் கழலே
    நினைந்தேன் கருப்புவிற்
தெருவிற் புகுந்தேன் திகைத்தடி
    யேனைத் திகைப்பொழிவி
உருவிற் றிகழும் உமையாள்
    கணவா விடிற்கெடுவேன்
திருவிற் பொலிசத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே.
5
வெம்மை நமன்தமர் மிக்கு
    விரவி விழுப்பதன்முன்
இம்மையுன் தாளென்றன் நெஞ்சுத்
    தெழுதிவை ஈங்கிகழில்
அம்மை அடியேற் கருளுதி
    யென்பதிங் காரறிவார்
செம்மை தருசத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே.
6
விட்டார் புரங்கள் ஒருநொடி
    வேவவோர் வெங்கணையாற்
சுட்டாயென் பாசத் தொடர்பறுத்
    தாண்டுகொள் தும்பிபம்பும்
மட்டார் குழலி மலைமகள்
    பூசை மகிழ்ந்தருளுஞ்
சிட்டா திருச்சத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே.
7
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்
    டிமையோர் பொறையிரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமுங்
    கொண்டது நீலகண்டா
புகழ்ந்த அடியேன்றன் புன்மைகள்
    தீரப் புரிந்துநல்காய்
திகழ்ந்த திருச்சத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே.
8
தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந்
    துன்றன் சரண்புகுந்தேன்
எக்காதல் எப்பயன் உன்றிற
    மல்லால் எனக்குளதே
மிக்கார் திலையுள் விருப்பா
    மிகவட மேருவென்னுந்
திக்கா திருச்சத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே.
9
பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப்
    பற்றவன் பொன்முடிதோள்
இறத்தாள் ஒருவிரல் ஊன்றிட்
    டலற இரங்கிஒள்வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய்
    குற்றக் கொடுவினைநோய்
செறுத்தாய் திருச்சத்தி முற்றத்
    துறையுஞ் சிவக்கொழுந்தே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com